Friday, 14 April 2017

vidumarai ninaivugal

சிறு வயதில் கோடை விடுமுறை என்றால் அது தஞ்சாவூருக்கு தான்.டெஹ்ராடூனிலிருந்து டெல்லி ,பிறகு சென்னை - தஞ்சாவூர் என்று மிக நீண்ட ரயில் பயணம் .ஒருவழியாக ஊரை சென்றடையும்போது, ரயிலின்  கரி உடம்பில் ஒட்டியிருக்கும் !வடக்கிலிருந்து வரும் எங்களுக்கு தஞ்சாவூரில் தாத்தா பாட்டியின் அமைதியான வீட்டில் விடுமுறையை கழிப்பது ,வித்தியாசமான  அனுபவமாக இருக்கும் .

தஞ்சாவூர் என்றாலே  கதம்ப வாசனையின் மணம். மனதை நிரப்பும்.அந்த வயதில் என்னவென்று புரியாத அந்த வாசனை மிகவும் பிடிக்கும்.ஸ்டேஷனுக்கு எங்களை அழைக்க மாட்டு வண்டியோடு குமாரனோ, முருகனோ (பெயர் ஞாபகம் இல்லை) வருவான். .  அதைப்பார்த்து நானும் தம்பியும் அலறுவோம் !மேடு பள்ளத்தில் போகும்போது டங் டங் என்று தலையில் இடிக்கும்  அதன் கூரை .கீழே மெத்தென விரித்திருக்கும் வைக்கோல், காலை அரிக்கும். ஆனால் எங்களை சௌகரியமாக வண்டிக்குள்ளே   உட்காரவைத்து ,அன்பாக அழைத்துப்போவான் அவன்! அரை மணி நேர ,வேதனையான பயணம். கோடியில் வரும்போதே,தாத்தாவிற்கு தெரிந்துவிடும்.வாசல்  கேட்டில் தயாராக நின்றிருப்பார்.பாட்டி  குஞ்சாக அவர் பக்கத்தில் ஆர்வத்துடன் எங்களை அழைக்க காத்திருப்பாள்.

நாங்கள் அவிழ்த்து விட்ட நாய்க்குட்டிகள் போல் வீட்டை  சுற்றி அங்கும் இங்கும் ஓடுவோம் .டெல்லியின் குட்டி வீடு இல்லையே இது ?எவ்வளவு பெரியது  ? சுற்றிலும் பெரிய தோட்டம்,பலவித மரங்கள்,கிணறு , தோய்க்கும் கல்,தண்ணீர் தொட்டி, ஊஞ்சல் என்று எல்லாம் எங்களை  உற்சாகமாக்கிவிடும்..எனக்கு மிகவும் பிடித்த,நான் பிறந்த அறை அங்கே தானே இருந்தது!என்  சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது.

பாட்டியின் கைமணம் எதுவாக இருந்தாலும்  சாப்பிடத்தூண்டும்.எல்லாம் தோட்டத்திலிருந்து பறித்த organic  காய்கறிகள் ஆயிற்றே!  கீரை,மணத்தக்காளி, பச்சை மிளகாய்,தக்காளி,சுண்டைக்காய் என்று ஒவ்வொரு செடியிலிருந்து பறித்து பாட்டிக்கு கொண்டு கொடுப்பது மிகவும் பிடித்த வேலை.செடிகளின் அற்புத சிருஷ்டி வியக்கவைக்கும்.அதி காலையில் எழுந்து,வாசலில் பாட்டி பெரிய கோலம் போடுவதையும்,பால்காரன் பால் கறப்பதையும் பார்ப்பது தினசரி  பொழுதுபோக்கு.

தாத்தா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் .ஒருமணி நேரம் கணக்கு,சயின்ஸ் என்று ஏதாவது படிக்கவேண்டும்.கையெழுத்து அழகாக இருக்க copy எழுதச்சொல்லுவார்.கட்டாயத்தின் பெயரில் அவசரமாக எழுதி முடித்து, பின்பக்கம் கிணற்றங்கரையில் விளையாட சென்றுவிடுவோம்.தம்பி ஏதாவது ஒரு மரத்தில் பரபரவென்று ஏறி உட்கார்ந்துவிடுவான்.தாத்தா வீட்டு   பலாப்பழம் பிரசித்தம்.மிகவும் தித்திப்பாக இருக்கும்.lichi  ல் வளர்ந்த நாங்கள்,பலாப்பழத்தை ரசித்து சாப்பிடுவோம்.தாத்தா தரையில் உட்கார்ந்து,எண்ணெய் தடவிய கைகளால் பழத்தை வெட்டி,சுளைகளை எடுக்கும்போதே நாவில் ஜலம்   ஊறும்.தேனை தொட்டு வாயில் போடும்போது,அதன் சுவையே தனிதான். 

வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று அந்த தெரு வீடுகளில் தடபுடலான வரவேற்பு ! அதுவும் சரளமாக இங்கிலிஷ்,ஹிந்தி பேசுகிறோமே என்று எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.லீவின் பாதிப்பொழுது கோடி வீட்டு வக்கீல் மாமா குழந்தைகளுடன் கழியும்.கோலி,பம்பரம்,பாண்டி என்று அவர்களுடன் சரிக்கு சரியாக விளையாடுவோம்.பல்லாங்குழி கற்றுக்கொண்டது அங்குதான்.அவர்கள் தோட்டத்தில் பச்சை கம்பளம் விரித்தாற்போல் அறிநெல்லிக்காய் விழுந்துகிடக்கும்.கை நிறைய அள்ளி அலம்பி,ஒவ்வென்றாக வாயில் போட்டு மெல்லும்போது அனுபவிக்கும் அந்த சுவையை வர்ணிக்கமுடியாது.

வாரத்தில் இரண்டு நாட்கள் தவறாமல் அம்மாவுடன் ப்ரஹதீஸ்வரர் கோவிலில் பொழுது கழியும். அதிக கூட்டமில்லாத,மிக  பிரம்மாண்டமான அந்த கோவிலினின் பிரகாரத்தை சுற்றி ஓடியாடி விளையாடி பொழுதை கழித்தது பசுமையாக நினைவிருக்கிறது.வீடு திரும்ப மனசே வராது.

ஒன்றரை மாதம் போனதே தெரியாமல் விடுமுறை முடிந்து விடும்.கிளம்பும்போது,தாத்தா எல்லோர் தலையிலும் கொத்து வேப்பிலையை சொருகி விடுவார்.  ஸ்டேஷனில் உள்ள குட்டிப்பிள்ளையார் கோவிலில் பிரார்த்திட்டுவிட்டு வண்டி ஏறுவோம். மனதில் உற்சாகமும் சந்தோஷமும் நிரம்பி  ஊர் திரும்புவோம். கவலை இல்லாமல்,கட்டுப்பாடு இல்லாமல் கழித்த அந்த விடுமுறை எங்கே? கோச்சிங் கிளாஸ், பலவிதமான camp, ipad என்று விடுமுறை நாட்களை கழிக்கும் இந்த கால குழந்தைகளுக்கு, அந்த நாட்களை மீட்டுத்தர முடியுமா என்று ஒரு  ஆதங்கம் இருந்துகொண்டே இருக்கிறது.



No comments:

Post a Comment