Friday, 8 September 2017

En Mudhal English Teacher

ஆசிரியர் தினம் வந்தால்,என் ஞாபகத்திற்கு முதலில் வருவது என்னுடைய ட்யூஷன் டீச்சர்,  Mrs.E. Gray தான்.டெல்லியில் இரண்டாம் கிளாஸ் வரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு,டெஹ்ராடூனில் இங்கிலீஷ் மீடியம் கான்வென்ட் ஸ்கூலில் சேர்ந்தபோது,ஒரு வார்த்தை இங்கிலீஷ் பேசத்தெரியாமல் திண்டாடிப்போனேன்.அந்த சிறிய வயதில்,தமிழும் ஹிந்தியும் மட்டுமே தெரிந்த எனக்கு,பள்ளிக்கூடம் ஒரு சவாலாக இருந்தது.மிகவும் அன்பான என் கிளாஸ் டீச்சர்,எனக்கு நிதானமாக பாடங்களை புரியவைத்தார்.அவர் சிபாரிசின்படிதான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அவர் உறவினரான Mrs.Gray யிடம் போய் சேர்ந்தேன்.

வயதான பாட்டி அவர்.பாப் செய்யப்பட்ட நரைமுடியும், frockம்மாக, சற்று கூனியபடி நடப்பார்.முதல் நாளே அவர் அன்புடன் என்னை அணைத்து வரவேற்த்தது இப்பவும் ஞாபகம் இருக்கிறது.எத்தனை கனிவான முகம்!ஸ்கூல் முடிந்ததும் tongaகாரர் (குதிரை வண்டி )டீச்சர் வீட்டில் கொண்டுவிட்டு வாசலில் காத்திருப்பார்.பாடம் முடிந்ததும் வீட்டில்  கொண்டுவிடுவார்.இது வாரத்தில் 5 நாட்கள் நடக்கும். 

அந்த குட்டி வீட்டின் வாசலில் சிறிய அழகிய தோட்டம் இருக்கும்.பாட்டியின் இரண்டு பிள்ளைகள்,மருமகள்,குழந்தைகள் என்று பெரிய குடும்பம்.அவர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் ஆகையால் தஸ், புஸ் என்று ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டு இருப்பார்கள்.தோட்டத்தின் ஒரு மரத்தடியில்தான் பெரும்பாலும் எனக்கு பாடம் நடக்கும்.மிகவும் ரம்யமான ஒரு சூழ்நிலை.டீச்சர் எப்படி சொல்லிக்கொடுத்தார் என்று ஞாபகம் இல்லை.ஆனால் மூன்று மாதத்தில் நான் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றது உண்மை ! என் கிளாஸ் டீச்சர் ஆச்சரியப்படும் அளவுக்கு எழுத்திலும் பேச்சிலும் மிகவும் தேறி விட்டேன்.


இந்த பாடங்கள் மத்தியில்,என் நினைவிலிருந்து நீங்காத இன்னொரு விஷயமும் உண்டு.தினமும் டீச்சர், ஒரு பழைய, துரு பிடித்த பிஸ்கட் டின்னிலிருந்து ஒரு பெரிய கேக் துண்டை எனக்கு கொடுப்பார்.நான் அதை ருசித்து உண்பேன்.வீட்டில் செய்த அந்த கேக் அவ்வளவு சுவையாகவும்,மணமாகவும் இருக்கும்.ஒரு நாள் கூட தவறாமல் டீச்சர் என்னை கேக் சாப்பிட வைத்துவிட்டுதான் பாடம் எடுப்பார்.அந்த கேக்குக்காக தான் டியூஷன் படிக்க போனேனோ என்று இப்போது தோன்றுகிறது!

இரண்டு மூன்று வருடங்கள் கழித்து ஒரு நாள் டீச்சர் இறந்துவிட்டதாக அப்பாவிற்கு செய்தி வந்தது.அன்று நான் அழுதது பார்த்து என் பெற்றோர்களே கலங்கி விட்டனர்.டீச்சர் என் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு போயிருக்கிறார்!என் ஆங்கில அறிவின் விதை விதைத்தது என் அருமை Gray டீச்சர் தானே !            


                    

Friday, 14 April 2017

vidumarai ninaivugal

சிறு வயதில் கோடை விடுமுறை என்றால் அது தஞ்சாவூருக்கு தான்.டெஹ்ராடூனிலிருந்து டெல்லி ,பிறகு சென்னை - தஞ்சாவூர் என்று மிக நீண்ட ரயில் பயணம் .ஒருவழியாக ஊரை சென்றடையும்போது, ரயிலின்  கரி உடம்பில் ஒட்டியிருக்கும் !வடக்கிலிருந்து வரும் எங்களுக்கு தஞ்சாவூரில் தாத்தா பாட்டியின் அமைதியான வீட்டில் விடுமுறையை கழிப்பது ,வித்தியாசமான  அனுபவமாக இருக்கும் .

தஞ்சாவூர் என்றாலே  கதம்ப வாசனையின் மணம். மனதை நிரப்பும்.அந்த வயதில் என்னவென்று புரியாத அந்த வாசனை மிகவும் பிடிக்கும்.ஸ்டேஷனுக்கு எங்களை அழைக்க மாட்டு வண்டியோடு குமாரனோ, முருகனோ (பெயர் ஞாபகம் இல்லை) வருவான். .  அதைப்பார்த்து நானும் தம்பியும் அலறுவோம் !மேடு பள்ளத்தில் போகும்போது டங் டங் என்று தலையில் இடிக்கும்  அதன் கூரை .கீழே மெத்தென விரித்திருக்கும் வைக்கோல், காலை அரிக்கும். ஆனால் எங்களை சௌகரியமாக வண்டிக்குள்ளே   உட்காரவைத்து ,அன்பாக அழைத்துப்போவான் அவன்! அரை மணி நேர ,வேதனையான பயணம். கோடியில் வரும்போதே,தாத்தாவிற்கு தெரிந்துவிடும்.வாசல்  கேட்டில் தயாராக நின்றிருப்பார்.பாட்டி  குஞ்சாக அவர் பக்கத்தில் ஆர்வத்துடன் எங்களை அழைக்க காத்திருப்பாள்.

நாங்கள் அவிழ்த்து விட்ட நாய்க்குட்டிகள் போல் வீட்டை  சுற்றி அங்கும் இங்கும் ஓடுவோம் .டெல்லியின் குட்டி வீடு இல்லையே இது ?எவ்வளவு பெரியது  ? சுற்றிலும் பெரிய தோட்டம்,பலவித மரங்கள்,கிணறு , தோய்க்கும் கல்,தண்ணீர் தொட்டி, ஊஞ்சல் என்று எல்லாம் எங்களை  உற்சாகமாக்கிவிடும்..எனக்கு மிகவும் பிடித்த,நான் பிறந்த அறை அங்கே தானே இருந்தது!என்  சந்தோஷத்திற்கு எல்லையே இருக்காது.

பாட்டியின் கைமணம் எதுவாக இருந்தாலும்  சாப்பிடத்தூண்டும்.எல்லாம் தோட்டத்திலிருந்து பறித்த organic  காய்கறிகள் ஆயிற்றே!  கீரை,மணத்தக்காளி, பச்சை மிளகாய்,தக்காளி,சுண்டைக்காய் என்று ஒவ்வொரு செடியிலிருந்து பறித்து பாட்டிக்கு கொண்டு கொடுப்பது மிகவும் பிடித்த வேலை.செடிகளின் அற்புத சிருஷ்டி வியக்கவைக்கும்.அதி காலையில் எழுந்து,வாசலில் பாட்டி பெரிய கோலம் போடுவதையும்,பால்காரன் பால் கறப்பதையும் பார்ப்பது தினசரி  பொழுதுபோக்கு.

தாத்தா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் .ஒருமணி நேரம் கணக்கு,சயின்ஸ் என்று ஏதாவது படிக்கவேண்டும்.கையெழுத்து அழகாக இருக்க copy எழுதச்சொல்லுவார்.கட்டாயத்தின் பெயரில் அவசரமாக எழுதி முடித்து, பின்பக்கம் கிணற்றங்கரையில் விளையாட சென்றுவிடுவோம்.தம்பி ஏதாவது ஒரு மரத்தில் பரபரவென்று ஏறி உட்கார்ந்துவிடுவான்.தாத்தா வீட்டு   பலாப்பழம் பிரசித்தம்.மிகவும் தித்திப்பாக இருக்கும்.lichi  ல் வளர்ந்த நாங்கள்,பலாப்பழத்தை ரசித்து சாப்பிடுவோம்.தாத்தா தரையில் உட்கார்ந்து,எண்ணெய் தடவிய கைகளால் பழத்தை வெட்டி,சுளைகளை எடுக்கும்போதே நாவில் ஜலம்   ஊறும்.தேனை தொட்டு வாயில் போடும்போது,அதன் சுவையே தனிதான். 

வடக்கிலிருந்து வந்தவர்கள் என்று அந்த தெரு வீடுகளில் தடபுடலான வரவேற்பு ! அதுவும் சரளமாக இங்கிலிஷ்,ஹிந்தி பேசுகிறோமே என்று எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.லீவின் பாதிப்பொழுது கோடி வீட்டு வக்கீல் மாமா குழந்தைகளுடன் கழியும்.கோலி,பம்பரம்,பாண்டி என்று அவர்களுடன் சரிக்கு சரியாக விளையாடுவோம்.பல்லாங்குழி கற்றுக்கொண்டது அங்குதான்.அவர்கள் தோட்டத்தில் பச்சை கம்பளம் விரித்தாற்போல் அறிநெல்லிக்காய் விழுந்துகிடக்கும்.கை நிறைய அள்ளி அலம்பி,ஒவ்வென்றாக வாயில் போட்டு மெல்லும்போது அனுபவிக்கும் அந்த சுவையை வர்ணிக்கமுடியாது.

வாரத்தில் இரண்டு நாட்கள் தவறாமல் அம்மாவுடன் ப்ரஹதீஸ்வரர் கோவிலில் பொழுது கழியும். அதிக கூட்டமில்லாத,மிக  பிரம்மாண்டமான அந்த கோவிலினின் பிரகாரத்தை சுற்றி ஓடியாடி விளையாடி பொழுதை கழித்தது பசுமையாக நினைவிருக்கிறது.வீடு திரும்ப மனசே வராது.

ஒன்றரை மாதம் போனதே தெரியாமல் விடுமுறை முடிந்து விடும்.கிளம்பும்போது,தாத்தா எல்லோர் தலையிலும் கொத்து வேப்பிலையை சொருகி விடுவார்.  ஸ்டேஷனில் உள்ள குட்டிப்பிள்ளையார் கோவிலில் பிரார்த்திட்டுவிட்டு வண்டி ஏறுவோம். மனதில் உற்சாகமும் சந்தோஷமும் நிரம்பி  ஊர் திரும்புவோம். கவலை இல்லாமல்,கட்டுப்பாடு இல்லாமல் கழித்த அந்த விடுமுறை எங்கே? கோச்சிங் கிளாஸ், பலவிதமான camp, ipad என்று விடுமுறை நாட்களை கழிக்கும் இந்த கால குழந்தைகளுக்கு, அந்த நாட்களை மீட்டுத்தர முடியுமா என்று ஒரு  ஆதங்கம் இருந்துகொண்டே இருக்கிறது.



Thursday, 9 February 2017

Oru Payanam

நாத்தனார் கணவரும்,நாத்தனாரும் பத்து நாட்களுக்குமுன் கனடாவிலிருந்து பேசியபோது மனது மிகவும் உற்சாகம் அடைந்தது.பழைய சிரிப்பும் உற்சாகமும் அவர்கள் குரலில் இழைந்தோடியது.இந்த மிக சந்தோஷமான கணங்களுக்கு,கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது?சில மாதங்களுக்குமுன் நடந்த சம்பவங்களெல்லாம் மனதில் படம் போல் ஓடியது.

மிக ஆவலுடன் எதிர்பார்த்த அந்த பயணம்!நாத்தனார்,அவள் கணவர்,மைத்துனர்,அவர் மனைவி, கணவர்,நான் என ஆறு பேரும் மிக  உற்சாகமாக அந்த பயணத்தை தொடங்கினோம்.சென்னை விமானநிலையத்தில்,சிறு குழந்தைகள் போல் சந்தித்தோம் இந்த சீனியர் சிட்டிசன்கள்! (மைத்துனர் மனைவி சிறியவள்).சில நாட்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக  பொழுதை கழிப்பதுதான் எங்கள் நோக்கம்.திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமியின் திவ்ய தரிசனத்துடன் ஆரம்பித்தது எங்கள்  பிரயாணம்.மனதில் அசாதாரண அமைதி.என்றென்றும் ஒற்றுமையாக,அன்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை.அடுத்த நாள் கன்னியாகுமரிக்கு புறப்படுமுன் breakfast சாப்பிட,  dining hall க்கு சென்றோம்.அங்கு ஒரு சிறிய படி இருந்ததால்,என்னை கவனித்து நடக்கச்சொன்னார் என் அருமை நாத்தனார்.தடுக்கி விடப்போகிறது என்று எச்சரித்தாள் .நானும் கவனமாக சிற்றுண்டியுடன் உட்காரப்போனேன்.தடால் என்று ஒரு சத்தம்!ஒரு கணம் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.தரையில் பலகாரங்கள் சிதறிக்கிடக்க,நாத்தனார் வலியில் துடித்துக்கிடந்தாள் .என்னை எச்சரித்தவள்,கணப்பொழுதில் தானே விழுந்துவிட்டாள்.அதிர்ச்சியில் உறைந்துபோனோம். 

சட்டென்று நானும் ஓர்ப்படியும், பரபரவென்று செயலில் இறங்கினோம்.பக்கத்தில் வெண்ணை கிண்ணத்தில் இருந்த ஐஸ் கட்டிகள்,tissue வால் நெற்றியிலிருந்து வழிந்துகொண்டிருந்த ரத்தத்தை கட்டுப்படுத்தினோம்.அவளை தூக்க சென்றவர்களிடம் கையை தொடவேண்டாம் என்றாள்.கையில் பலத்த அடி பட்டிருந்தது தெரிந்தது.ஹோட்டல் மேனேஜர் மற்றும் ஊழியர்கள் அவளை மெதுவாக wheel chair ல் உட்காரவைத்து தள்ளிக்கொண்டே பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.காலை வேளையாக இருந்ததால் அதிகம் கூட்டம் இல்லை.உடனேயே first aid கொடுத்து, xray யும் எடுத்தார்கள். எலும்பியல் டாக்டர் பார்த்து அவள் தோள் பட்டை விலகியிருப்பதாக சொன்னார்.உடனே அதை சரி செய்யப்போவதாகவும் சொன்னார்.அத்தனை வலியையும்   நாத்தனார் பொறுமையாக சகித்துக்கொண்டிருந்தாள்.  அதையும் மீறி,சர்க்கரை நோயாளிகளான தன் இரு சகோதரர்களும் ஒன்றும் சாப்பிடவில்லையே என்று கவலைப்பட்டு,இருவரையும் சாப்பிட்டு வருமாறு வற்புறுத்தினாள்.அந்த க்ஷணம் என் மாமியாரே வந்து விட்டார் போல் தோன்றியது.அவரும் இப்படித்தானே சொல்லியிருப்பார்!

ஒரு வழியாக டாக்டர் சிகிச்சையை  முடித்தார்.அந்த பயங்கர வலியை தாங்கிக்கொள்ளும் சக்தியை கடவுள் தான் அவளுக்கு கொடுத்திருப்பார்.சென்னைக்கே திரும்பிவிடலாமா என்று கூட நாங்கள் யோசித்தோம்.ஆனால் அவள் மறுத்துவிட்டாள்.வலது கையில் sling உடன்  இருந்த அவளுடன் எங்கள் பயணம் தொடர்ந்தது.கன்யாகுமரியில் நாத்தனார் கணவருக்கு கடுமையான ஜுரம் வந்துவிட்டது.அவருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டே, நாங்கள் ஊரெல்லாம் சுற்றிப்பார்த்தோம்.பிறகு மதுரை,தஞ்சாவூர்,கும்பகோணம் என்று ஒரு வழியாக பயணம் முடிவடைந்தது.இத்தோடு நிற்காமல்,கனடா சென்றடைந்த சில மணி நேரங்களில்,நாத்தனார் கணவர் கீழே விழுந்து,ஆஸ்பத்திரியில் மயக்க நிலையில் admit ஆகி,கவலைக்கிடமானது அறிந்து மிகவும் பதறி விட்டோம்.ஒரு   வாரத்தில் அவரும் குணமாகி
வீட்டிற்கு வந்து சேர்ந்து,படிப்படியாக தேறி வருகிறார்.
 
இந்த பதிவில் நடந்தவற்றை விட,அதனால் என்ன புரிந்தது என்பது முக்கியம்.நடக்கும் ஒவ்வொரு துன்பத்திலும் ஒரு இன்பம் ஒளிந்திருக்கிறது.கீழே விழுந்த நாத்தனார்,ஒவ்வொருவரின் அன்பிலும் பாசத்திலும் தன வலியை மறந்து போனாள்.இத்தனை நடந்தும் எங்கள் பயணம் மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தது.எல்லோரும் சேர்ந்து ஒருத்தருக்கொருத்தர்  உதவி செய்து கொண்டுஇருப்பதில் எவ்வளவு சந்தோஷம்!சுற்றி உட்கார்ந்து,பழைய நினைவுகளை அசை போடும்போது கிடைக்கும் சந்தோஷம் அளவில்லாதது.இந்த விபத்திற்கு பிறகு எங்கு சென்றாலும் முதலில் மைத்துனர்,பின் நாங்கள் பெண்கள் பிறகு இரு ஆண்கள் என்று செல்லும்போது, இவர்களால் நமக்கு எவ்வளவு பாதுகாப்பு என்ற நன்றி உணர்ச்சி! உயரமான மைத்துனர், படி,படி என்று எங்கு படி இருந்தாலும் எச்சரிக்கை செய்து கொண்டே போகும் அழகு!பாசத்திலும் அன்பிலும் கறைந்துதான் போனோம் ! இந்த ஜென்மத்தில் நமக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கொடுத்த கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது குறைவு தான் !