Tuesday, 23 June 2020

இந்த கொரோனா லாக்டௌன் வந்தாலும் வந்தது, மூன்று மாதமாக வீட்டிற்க்குள் அடைபட்டு இருக்கிறோம்.வாசல் படியைக்கூட நான் தாண்டவில்லை. பல நண்பர்கள் பொழுதே போகவில்லை என்று அங்கலாய்க்கிறார்கள்.ஆனால் எங்களுக்கோ பொழுதே போறவில்லை.

அதிகாலை வெந்நீர் குடிக்கும் படலத்துடன் துவங்கும் எங்கள் தினம்.இது பலவருடப்பழக்கம். பிறகு வாசலில் இருந்து பால் பாக்கெட்டுகளை எடுக்க என்னை தயார் படுத்திக்கொள்வேன்.திகில் படத்தில் வருவது போல், இரண்டு கைகளிலும் ஒரு துணியை கட்டிக்கொண்டு, கதவருகில் செல்வேன்.கணவர் கதவை திறக்க, நான் எதிலும் படாமல் அதில்  கட்டி இருக்கும் கூடையை பிரித்து, அப்படியே பின்பக்கம் சோப்புத்தண்ணீர் நிறைந்த பக்கெட்டில் போட்டுவிடுவேன்.உடனே திறந்து வைத்திருக்கும் வாஷிங் மெஷினில் கையை உதறினால் துணி உள்ளே விழுந்து விடும். பிறகு கைகளை நன்றாக கழுவி விடுவேன். அரை மணி கழித்து பால் பாக்கெட்டுகளை ப்ரிட்ஜில் வைத்து விடுவேன். இதன் பிறகு கணவருக்கு காபி, எனக்கு எலுமிச்சையும் தேனும் கலந்த டீ. சிறு இடைவேளைக்கு பிறகு பிராணாயாமம்,யோகா, வாக்கிங் எல்லாம் தொடங்கும். சோபாவை நகர்த்தி வீட்டிற்குள்ளேயே கணவர் 8 போட்டு நடப்பார். சில சமயங்களில் இருவரும் வேகமாக நடந்து மோதிக்கொள்வதும் உண்டு. பின்னணியில் ஹனுமான் சாலிசா,விஷ்ணு சஹஸ்ரநாமம் என ஸ்லோகங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். வீடே பக்திமயமாகி விட்டது.எல்லாம் கொரோனாவின் கைங்கர்யம்.

சுறுசுறுப்பாக இருக்கும் இந்த வேளையில்,வீட்டு வேலையை முடிப்பதுதான் சரி. வேலை செய்யும் பெண் இல்லாததால்,மூன்று நாட்களுக்கு ஒரு முறை,நான் பெருக்க, கணவர் mop வைத்து துடைப்பார்.இந்த வேலையில் அவர் எக்ஸ்பர்ட் ஆகி விட்டார்.பள பளவென்று தரை மின்னுகிறது.இனி வேலைக்கு ஆள் தேவை இல்லையோ?

அடுத்து அகலமான பாத்திரத்தில் வெந்நீர் ஆவி பிடிக்கும்  படலம்.திடீரென்று கட கடவென்று ஒலி  கேட்கும்.பயப்பட வேண்டாம்.கணவர் உப்பு/மஞ்சள் தண்ணீரில் gargle செய்து கொண்டிருக்கிறார்.இப்போதெல்லாம் என் சமையலறை ஒரு குட்டி workshop போல் தோன்றுகிறது.ஒரு பாத்திரத்தில் இஞ்சி,ஓமம்,சோம்பு,ஜீரகம் என ஒரு கலவை கொதித்துக்கொண்டிருக்கும். நாள் முழுவதும் இந்த நீரை அவ்வப்போது குடித்தால் நல்லது என்று சொல்கிறார்கள்.கொரோனாவிலிருந்து தப்பிக்க, என்னவெல்லாம் சாப்பிட வேண்டுமோ அதை கணவர்  தான் தயாரிப்பார். எதிர்ப்பு சக்திக்காக இரண்டு பூண்டு துண்டுகளை பொடிப்பொடியாக நறுக்கி வைப்பார்.கட கடவென்று அதை தண்ணீருடன் முழுங்க வேண்டியது தான்.  .Breakfastட்டுடன்   பாதாம்,பிஸ்தா என ஒரு dry fruit கலவை காத்திருக்கும்.அதையும் உட்கொண்டால் உடம்புக்கு ப்ரோட்டீன்,வைட்டமின் மற்றும் ஏராளமான சத்து கிடைக்குமல்லவா ? இந்த அரக்கனை வெல்ல சக்தி வேண்டாமா?

பூஜை செய்ய உட்கார்ந்தால் தூக்கம் கண்களை சுழற்றும்!பின்னே இவ்வளவு விஷயங்கள் வயிற்றில் போனால் எப்படி ? இதன் பிறகு வெய்யிலுக்கு இதமாக ஜீரகம் கலந்த மோர்.இதனிடையில் என் கணவர் ஒரு சின்ன கிண்ணம் தண்ணீரில் ஒரு சிட்டிகை ஸ்வாமி வீபூதியை கலந்து ஸ்லோகம் சொல்லிக்கொண்டே எல்லா அறைகளின் முக்கிலும் தெளிப்பார்.எங்கள் சாய் குழுவில் ஒருவர் சொன்னதால் ஏற்பட்ட நம்பிக்கை.

வாரம் ஒருநாள்,  mineral water can சப்ளை செய்பவன் வந்தால் ஒரே டென்ஷன் தான்.அவன் வண்டி வரும்போதே, கணவரை எச்சரிப்பேன்.அவர் மாஸ்க்கை அணிந்துகொண்டு கதவை திறந்து வைத்து தயாராக இருப்பார். அவன் உள்ளே வந்து விடுவானோ என்ற  டென்ஷனில், படபடப்பாக,அங்கேயே வைத்து விடுங்கள் என்று கையை காண்பிப்பார்.அவன் வாசலில் வைத்து விட்டு போய் விடுவான். இதன் நடுவே onlineல் dunzo,big basket என்று காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் வரவழைத்தால் போச்சு.காலையிலேயே கணவர் டென்ஷனுடன் டெலிவரி செய்பவனின் போனிற்காக காத்திருப்பார். மெயின்   கேட்டில் போய் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். மாஸ்க், gloves ,sanitizer  என்று தன்னை காபந்து செய்து கொண்டிருக்கிறாரா என்று ஒரு போலீஸ்காரி போல செக் செய்வேன்.ஒன்றும் மறக்கக்கூடாது அல்லவா? மாடிப்படி வழியாக கீழே போய் ஐந்து நிமிடங்களில் லிப்ட்டில் வந்து விடுவார். சாமான் பையை அப்படியே வாசலில் வைத்துவிட்டு  குளிக்க போய் விடுவார். காய்கறிகளை,உப்பு மஞ்சள் தண்ணீரில் கழுவி, காயவைத்து, தனித்தனியாக பிரித்து பிரிட்ஜில் வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சாப்பாடு முடிந்து அப்பாடா என்று உட்கார்ந்தால், இரண்டு amla candy காத்திருக்கும். யார் என்ன சொன்னாலும் அதை கேட்டு விடவேண்டியதுதான்.

மதியம் க்ரீன் டீ அல்லது சுக்கு காபி அருந்தும் நேரம்.5 மணிக்கு மேல் இஞ்சி,மிளகு, பட்டை,கிராம்பு, வெற்றிலை,எலுமிச்சை கலந்த ஒரு கஷாயம் தயாரிக்கப்படும்.அதையும் குடிக்க வேண்டியதுதான்.ஏழு ஏழரைக்குள் dinner க்கு பிறகு இன்றைய கடை முடிந்தது என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை.படுக்கும் முன் கணவருக்கு "கோல்டன் மில்க் "! மிக ஸ்டைலான பெயர்! பாலில் மிளகும் மஞ்சள் பொடியும் சேர்ந்ததுதான் அது. இத்துடன் அவர் கொரோனா எதிர்ப்பு சக்தி diet முடியும்.எனக்கு பால் ஒத்துக்கொள்ளாது.அதனால் குல்கந்து நீர்.அட ,அது வேறா என்றால், ஒரு பிரபல dietician வீடியோவில் சொன்னதால்,நான் அதை எடுத்துக்கொள்கிறேன். நன்றாக தூக்கம் வருமாம் ! acidity  போயே போய் விடுமாம்! எல்லாம் ஒரு நம்பிக்கை தான்.

நாள் முழுவதும் கொரோனவை தடுக்க, இப்படி சாப்பிட்டுக்கொண்டும்.ஏதாவது குடித்துக்கொண்டும் இருக்கும் இடையில், பல டெலிபோன் call கள், zoom meet ல் நண்பிகளுடன் கூட்டுப்பிரார்தனை,பஜன்,அரட்டைக்கச்சேரி, netflix /amazon ல் வெவ்வேறு பாஷைகளில் சினிமா    என்று பலவித நிகழ்வுகள் வேறு!

ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.ஒரு homoepathy மருந்து மூன்று நாட்களுக்கு, மூன்று மாதம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்லது என்றார்கள்.அதையும் உட்கொண்டு விட்டோம். "பகாசுர குடிநீர் "என்று கணவர் அடிக்கடி குறிப்பிடும் கபசுர குடிநீர் பாக்கெட் இன்னும் பிரிக்கப்படவில்லை.அதை எப்போது குடிப்பது என்பதுதான் கேள்விக்குறி !

மனதில் பயமும் கவலையும் நிரம்பி இருக்கும் இந்த வேளையில்,நமக்கு கை கொடுப்பவர் கடவுள் ஒருவர் மட்டும்தான்.அந்த சக்தியால்தான் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனவிலிருந்து மனிதர்களை காப்பாற்றமுடியும் .எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்.🙏



 



3 comments:

  1. Excellent, amma! Continue writing. Maybe one about your various calls.

    ReplyDelete
  2. பகவானிடம் பயம்,பக்தி இருக்கோ இல்லையோ கொரோனாவிடம் எவ்வளவு பயம் பக்தி!அப்பப்பா ஒரு நாளைக்கு இத்தனை shedules இருந்தால் கவனம் முழுவதும் இந்த வேலைமேல்களில்தான் இருக்கும். இதுவே ஒரு தியான முறைதான்!(meditation )இல்லையா?
    அருமையான விவரிப்பு!Hats off to you Rajee!

    ReplyDelete