Monday, 17 August 2015

Anbulla Amma

நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது .தூக்கமில்லாத 25நாட்கள் துக்கம்,கவலை ,ஆதங்கம் ,இயலாமை என, பலவித மனநிலையிலும் ,எப்படியேனும் நல்லபடியாக வீடு திரும்பி விடுவீர்கள் என்று ஒரு தீர்க்கமான நம்பிக்கை .என் அம்மா மறைந்த துக்கம் ஆறுவதற்குள் ,நீங்களும் அதே போல அதே ஆஸ்பத்திரியில் ,நினைவுகள் அல்லாட படுத்திருப்பீர்கள் என்று நம்பத்தான் முடியவில்லை .

பல வருஷங்களாக அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் -"நீ காலையில் காப்பியுடன் வரும்போது ,நான் தூக்கத்திலேயே போயிருக்கவேண்டும் .நான் கடவுளை தினந்தோறும் வேண்டுவது இதுதான் .உனக்கு கஷ்டமே கொடுக்கக்கூடாது".நீங்கள் மனதார விரும்பியது எப்படி பொய்த்துவிட்டது ?இவ்வளவு வருடம் படாத அவஸ்தையை 25நாட்களில் அனுபவித்து விட்டீர்கள் .ஒரு அதிகாலை நேரம் ,உங்கள் குழந்தைகள் சூழ்ந்திருக்க ,நீங்கள் மெதுவாக அடுத்த பயணத்தை தொடங்கிய போது ,மனது அதை ஏற்க தயங்கியது .

ஒரு வருஷம் ஓடிவிட்டது .மாமியார் என்ற உறவு ஏதோ ஒரு கால கட்டத்தில் அம்மாவாகி போனது .40வருஷ உறவல்லவா ?உங்களிடம் பெற்றதும் கற்றதும் பல,பல ,விஷயங்கள் .எங்களை சுற்றி நீங்கள் என்றென்றும் இருப்பது போல ஒரு பிரமை இருந்து கொண்டேயிருக்கிறது .

Sunday, 9 August 2015

Piranda Naal

ஆகஸ்ட் 7, என் 62வது பிறந்த நாள் !ஒவ்வொரு வருடமும் கணவர்,குழந்தைகள்,உறவினர்கள்,நண்பர்கள் என்று வாழ்த்துக்களும்,அன்பு ததும்பும் வார்த்தைகளும் வழங்கினாலும், நான் அதிகமாக எதிர்பார்ப்பது பெரியவர்களின் ஆசிர்வாதத்தை தான்.என் அம்மாவும் ,மாமியாரும் இந்த நாட்களையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளமுடியாது என்பதால் ,முன்னரே தெரியப்படுத்தி விடவேண்டும் என்று ஒரு நியதி .அன்று என்னை வாழ்த்தவில்லை என்றால் மிகவும் வருத்தப்படுவார்கள் .இப்படி இருமுறை நடந்து விட்டதால், நான் அவர்களுக்கு முதல் நாளே தெரியப்படுத்தி விடுவேன்.காலையில் அவர்கள் ஆசியுடன் தான் என் நாளே தொடங்கும் .இது பல வருடங்களாக என் வீட்டில் நடக்கும் ஒன்று ."எனக்கு தான் இத்தனை வயதாகிவிட்டதே" என்றால் ,"இல்லை ,எங்களுக்கு இது மிக மகிழ்ச்சியான நாள் .நீ ஆரோக்யத்துடன் ,நல்லபடியாக இருக்கவேண்டும் என்பது தான் எங்கள் பிரார்த்தனை"", என்று மனமார சொல்வார்கள் .

போன வருடம் என் அம்மா காலமாகி ஒரு மாதம் தான் ஆகி இருந்தது .மாமியாரோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருந்தார் .மிகுந்த வேதனையுடன் ஆஸ்பத்திரி போய் அவரை வணங்கினால் ,அவருக்கு எதுவும் புரியவில்லை .மறக்கமுடியாத ஒரு துக்கமான பிறந்த நாள் அது .இந்த வருடம் அதுவும் இல்லை .இனி நாம்தான் பெரியவர்கள் .என்ன தான் குழந்தைகள் ,உறவினர்கள் வாழ்த்து தெரிவிப்பது மிக  மகிழ்ச்சியாக இருந்தாலும் ,இவர்கள் இருவரும் இல்லாதது பெரிய குறை தான்.சதாசர்வகாலம் என் நலனுக்காக பிரார்த்தனை செய்தவர்களாயிற்றே !இவர்கள் இல்லாத குறையை தீர்க்கும் விதம் ,என் நாத்தனாரின் மாமியார் கனடாவிலுருந்து வாழ்த்தி ஆசிர்வதித்தபோது ,அளவில்லா சந்தோஷம் அடைந்தேன் .


என் 60வது பிறந்த நாளை ,மாமியார் ,அம்மா ,குழந்தைகள் என கொண்டாடினோம்.அன்று எடுத்த புகைப்படம் தான் இவர்களின் கடைசி என்று கனவிலும் நினைக்கவில்லை .இருவரும் மிக சந்தோஷமாக கலந்து கொண்டார்கள் .60 வயது என்று எனக்காக ஏகப்பட்ட பிரார்த்தனைகள் ,ஆசிர்வாதங்கள் .இந்த படத்தை ஒரு பொக்கிஷமாக கருதுகிறேன் .அதை பார்க்கும் போதெல்லாம் கண்களை கண்ணீர் மறைக்கிறது .