Sunday, 30 October 2016

Oru Viradham

இரண்டு வாரங்களுக்குமுன் "karvachauth" - வட மாநிலங்களில் பெண்கள் தங்கள் கணவருக்காக விரதம் இருக்கும் பண்டிகை.ஒருமாதம் முன்பே, beauty parlour, மெஹந்தி காரர்கள் என்று எல்லோரும் discount கொடுப்பதாக எல்லா இடங்களிலும் அறிவிப்பு விட்டார்கள்.அகல் விளக்குக்கும் எலுமிச்சை பழத்திற்கும் ஒரே டிமாண்ட்.

காலையில் இருந்தே பெண்கள் facebook ல்   மிகவும் பிஸியாக இருந்தார்கள்.ஒருத்தருக்கொருத்தர் லைட்டாக பழம்,ஜூஸ் என்று என்ன சாப்பிடவேண்டும் என்று டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர்.நாள் முழுக்க பட்டினி கிடக்க முடியாதே!குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு,அங்கும் இங்கும் பல பெண்கள் போய்க்கொண்டிருந்தனர்.எல்லாம் beauty parlour க்கும்,மெஹந்தி இட்டுக்கொள்வதற்கும் தான்!ஆங்காங்கே மெஹந்தி காரர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.பாவம்,கணவர்கள் பாடு திண்டாட்டம்தான்போலும் !டீ ,காபி,cereal என்று சாப்பிட்டுவிட்டு வேலைக்கு போய்விட்டார்கள்.அவர்களுக்காக மனைவிகள் நாள் முழுவதும் விரதம் இருக்கிறார்களே!! சில கூஜா போடும் கணவர்கள் தன் பங்கிற்கும் விரதம் இருந்தார்கள்.

மாலை நாலு மணிக்கு மேல் பார்த்தால்,அரை பாண்ட்,முக்கால் பாண்ட் பெண்கள்,அடையாளமே தெரியாதபடி,புடவை,காக்ரா சோளி,மேக்கப் என்று உருமாறி விட்டார்கள்.கிளப் ஹவுசில் கல்யாணக்களை கட்டிவிட்டது.ஹால் நிறைய சிரிப்பும், பேச்சுமாக அழகழகான பெண்கள்.ஹிந்தி பாட்டிகளெல்லாம், ஜிமிக்கி அணிந்து, பளபள உடைகளில் தள்ளாடியபடி வந்தார்கள்.இன்று அவர்களுக்கு முக்கியத்துவம் வந்து விட்டது.மூத்த பாட்டிகள் தட்டுத்தடுமாறி மெதுவாக ஸ்டேஜில் ஏறி, சேரில் உட்கார்ந்துகொண்டு, மைக்கில் ஸ்லோகம் சொல்லியபடி, பூஜை செய்தார்கள்.கீழே உட்கார்ந்திருந்த அத்தனை பெண்களும் பக்தியோடு,அப்படியே அதை பார்த்து செய்தனர்.

பூஜை முடிந்து, அலங்காரபூஷிணிகள்,  மெல்லமெல்ல ,அன்னநடையாக நடந்து போனார்கள்.ஒரு கையில் பிரசாத தட்டு,நடுவில் எலுமிச்சையில் ஏற்றிய விளக்கு,இன்னொரு கையால் தடுக்கும் புடவையை பிடித்துக்கொண்டு மிக கவனமாக சென்றார்கள்.

இருட்டியபிறகு,நூற்றுக்கு மேலான இத்தனை பெண்களும்,மைதானத்தில் கையில் ஜல்லடையுடன் சந்திரனை பார்க்க காத்திருந்தார்கள்.சந்திரனோ,மேகங்களிடையே கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார்.ஜல்லடை வழியாக சந்திரனை பார்த்தபின்,தண்ணீர் அருந்தி விரதத்தை முடிக்கவேண்டும்.பிறகு கணவரை வணங்கி,அவருடன் சேர்ந்து உணவருந்தவேண்டும்.கூட்டம் கலகல என்று இருந்தது.கணவர்கள் ,குழந்தைகள் என்று அந்த காட்சியை பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.Jogging போய்க்கொண்டிருந்த இரண்டு வெள்ளைக்காரர்கள்,அந்த பெரும் கூட்டத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.எல்லோரையும் போல் ஆகாயத்தை நோக்கிய அவர்கள்,ஒன்றும் புரியாமல் புன்னகையுடன் சென்றனர்.

எனக்கு இந்த விரதங்களில் நாட்டமும் கிடையாது,நம்பிக்கையும் கிடையாது.இதனால் பலன் கிடைக்குமா என்றும் தெரியாது.ஆனால் இந்த காலத்தில்,இவ்வளவு modern பெண்கள் இதை செய்யும்போது,அது ஒரு social activity க்காக என்றாலும்,பலர் அதில் நம்பிக்கை வைத்து செய்வதாக தோன்றுகிறது.ஒவ்வொரு கல்யாணத்தையும் தக்க வைத்துக்கொள்ள பாடுபடும் இந்த தருணத்தில்,இந்த விரதம் ஒரு நல்ல விஷயமாகப்படுகிறது.